Saturday, March 13, 2010

ஹெச்.ஜி.ரசூல் எழுதிய புதிய திறனாய்வு பின்நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாம்பிரதிகள்


By கவிஞர் நட.சிவகுமார்

பின்நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாத்தின் பிரதிகளை அணுகும் தமிழின் முதல்நூலென இதைச் சொல்லலாம்.

மைலாஞ்சி கவிதைநூல்வழியாக வெகுவாக அறியப்பட்ட ஹெச்.ஜி.ரசூலின் இந்தப் படைப்பு நாட்டார்மரபு துவங்கி மத்தியகிழக்கு அரபுநாடுகளிலும் உலக அளவிலும் பேச்ப்படுகிற இஸ்லாமிய மரபுகளை ஊடிழைப்பனுவலாய் மீளாய்வு செய்கிறது.பண்பாட்டு இஸ்லாம் கருத்தாக்கத்தை இதன்மூலம் வந்தடைய முடியும்.

சூபிகளின் மாற்று உரையாடல், நியோசூபிசம்,சூபி இசை,அடித்தள மக்களின் தர்காபண்பாட்டு அரசியல், வெகுஜன இஸ்லாம் என்பதான தமிழ்மண்சார் அடையாளங்களை உள்வாங்கிய இஸ்லாத்தின்பரப்பு இந்நூலின் அறிமுகமாகிறது.

காலனியாக்கத்திலிருந்து விடுதலை பெற்ற மூன்றாம் உலக நாடுகளின் முஸ்லிம் அறிஞர்கள் முன்வைக்கும் பின்காலனிய இஸ்லாமிய சிந்தனை பாசிச ஆக்ரமிப்புக்கு எதிர் அணிதிரட்டலான இஸ்லாம் அரசியல் என இதன் எல்லைகள் விரிவடைகிறது.

வகாபிசமும் நவீனமுதலாளியமும்,தெளகீதுபிராமணீயம்,ஏகத்துவ அரசியலின் தோற்றுவாய்

என மாறுபட்ட சிந்தனை உலகங்கள் விவாதத்திற்கு உட்படுத்தப்படுகிறது.

அரபுவழிப்பட்ட மரபுவழி நிறுவன இஸ்லாம் முன்வைக்கும் ஷரீஅத் குற்றவியல்தண்டனைச் சட்டங்கள்

மீள வாசிக்கப்படுகிறது.புனிதப்பிரதிகளை ஆதாரங்களாக்கி கட்டமைக்கும் அடிப்படைவாதம்,தீவிரவாதத்தை திருக்குரானின் புனிதம்சார்ந்த கற்பிதங்கள் கட்டவிழ்த்து காட்டுகிறது.

பின்நவீன அரபுப் பெண்ணியம் பிறிதொரு தளத்தின்குரல். புனைவு மொழியாடல்கள் கறுப்பு இஸ்லாம் ஜிகாத் தலித்முஸ்லிம் என சொல்லப்படாத சமகால இஸ்லாத்தின் பன்முகத்தன்மை இங்கு பரிசீலனைக்கு உள்ளாகிறது

சென்னை மருதாபதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது.இந்நூலில் கீழ்கண்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

1) சூபிகளின் மாற்று உரையாடல்

2) சூபி இசை - இதயத்திலிருந்து ஒரு செய்தி

3)வகாபிசமும் நவீன முதலாளியமும்

4)தர்கா பண்பாட்டு அரசியல்

5)நாட்டார் இஸ்லாம்

6)மவ்லிதுகளின் யதார்த்தமும் புனைவு மொழியாடல்களும்

7)தெளகீது பிராமணர்களின் கூர்மழுங்கிய வாள்களும்

வெட்டுப்பட்ட சில பண்பாட்டுத் தலைகளும்

8)ஏகத்துவ அரசியல் மற்றும் சமயமரபுகளின் தோற்றுவாய்

9)கறுப்பு இஸ்லாம்

10)ஷரீஅத் குர்றவியல் - ஒரு மறுவிவாதம்

11)பின்நவீன அரபுப் பெண்ணியம்

12)திருக்குரானின் புனிதம்சார்ந்த கற்பிதங்கள்

13)மறுசிந்தனையில் திருக்குரான்

14)இஸ்லாமியச் சொல்லாடல்களின் பன்முகப்புரிதல்

மொத்தம் 128 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை ரூ80/

நூல் கிடைக்குமிடம்

மருதா,2/100 5வது குறுக்குத்தெரு,குமரன்நகர்,சின்மயாநகர்,சென்னை - 92

தமிழ்நாடு,இந்தியா

பேச 09382116466

மின்னஞ்சல்

Marutha1999@rediffmail.com

அர்சால்




By ஹெச்.ஜி.ரசூல்

இந்தியாவில்வாழும் தலித்முஸ்லிம்களின் உரிமைகளையும்,குரல்களையும் பதிவு செய்யும் வகையில் இந்தியன் தலித் முஸ்லிம்ஸ் வாய்ஸ்( IDMV) ஜூலை 22 , 2008-ல் உருவாகியுள்ளது. இது ஜனநாயக் ரீதியான ஒரு பரந்துபட்ட விவாததளத்தை முன்னிறுத்துகிறது. இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று 1950 களில் மறுதலிக்கப்பட்ட உரிமையைமீண்டும்திரும்பப்பெறுதலாகும்.தலித்முஸ்லிம்களையும் பட்டியலில் உள்ள சாதியினர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் சேர்த்திடவும் இதற்குதடையாக இருக்கிற இந்திய அரசியல் சாசனபிரிவு 341 - ல் திருத்தம் கொண்டுவரவும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.இந்திய அரசியல் சாசன பிரிவு 341 முஸ்லிம் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க மறுக்கிறது. இந்து சமய அடிப்படையில் பட்டியலில் உள்ள சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு உள்ள இட ஒஅதுக்கீட்டு உரிமையை முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமய தலித்களுக்குவழங்க மறுப்பது,சட்டத்தின் முன் அனைவரும் சமமென்கிற அரசியல் சாசனபிரிவு14,சமய அடிப்படையிலான சமூக ஏற்றத்தாழ்வுகளை தடை செய்கிற இந்திய அரசியல்சாசன பிரிவு15, எந்த ஒரு சமயத்தை ஏற்றுக் கொள்ளவும் ,செயல்படுவதற்குமான சுதந்திரத்தை தந்துள்ள அரசியல்சாசனபிரிவு 25 ஆகியவற்றிற்கு எதிரானதாக இருப்பதாக அறிவிக்கிறது.

1950களில் அரசியல்சாசன ஆணையில் இடம்பெற்ற முஸ்லிம் அர்சால் அல்லது முஸ்லிம்தலித் பிரிவினர்களை இதில் அடையாளப்படுத்தவும் இவ்வமைப்பு உரிமை கோருகிறது. அந்த வகையில் நட்( Nutt) பக்கோ(Bakkho) பத்தியாரா(Bhatiyara) குஞ்ரா(Kunjra )துனியா(Dhunia) கலால்(Kalal)தப்லி(Dafali) கலால்கார்(Halakhor)டோபி(Dhobi) லால்பெகி(Lalbegi) கோர்கான்(Gorkan) மீர்சிகார்(Meershikar) சீக்(Cheek) ரங்கிர்ஸ்(Rangrz) தர்ஸி(Darji) மோசிஸ்(Mochis) முக்ரிஸ்(Mukris)மற்றும் கருடிஸ்(Garudis) ஆகிய உட்பிரிவுகள் முஸ்லிம்தலித்களின் வரிசைப்பட்டியலில் இடம்பெறுகின்றனர்.

இஸ்லாம் சமய அடிப்படையில் இந்துமத வர்ணவகைப்பட்ட சாதீயத்தை ஒப்புக் கொள்ளவில்லை என்றபோதிலும் சாதீயக் கூறுகளைப் போன்றே சமூகப் படிநிலைகள் இந்திய முஸ்லிம்களிடத்தும் வேரூன்றியுள்ளதை மறுத்துவிடமுடியாது.இந்துக்களால் பாதிப்படையும் தலித்துகளைப்போலசமூகரீதியாகமுஸ்லிம்தலித்களும்பாதிப்படைந்துள்ளார்கள்.பொருளாதாரரீதியாகவும் கல்வியிலும்,கலாச்சார அளவிலும் மிகவும் பலவீனமான நிலையில் முஸ்லிம்கள் உள்ளார்கள்

ஈத் பெருநாளில்கூட பொதுவான முஸ்லிம்கள் தலித்முஸ்லிம்களோடு இணைந்து உணவு உண்ணுவதற்கும் கட்டியணைத்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதற்கும் வழியற்று ஒதுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

இந்நிலை தீர்க்கப்படவும், அரசியல்ரீதியான அதிகாரத்தை பெறுவதற்குதலித்மற்றும்இதரபிற்படுத்தபட்டமுஸ்லிம்களின்பிரதிநிதித்துவம்,கமிஷன்கள்,அரசுநிறுவனங்கள்,முஸ்லிம் அமைப்புகளில் வழங்கப்படவேண்டும்.மதசார்பற்ற கட்சிகள் அரசியல்ரீதியாக இந்த முன்னுரிமையை வழங்கவேண்டும்

மத்திய மாநில அரசுகள் இட ஒதுக்கீட்டு கொள்கையில் தலித்முஸ்லிம், மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு முன்னுரிமை அளிக்க தகுந்த சட்டரீதியான உரிமை அளிக்கப்படவும் வேண்டும், தலித்முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதான தவறான விவாதங்களை சரிப்படுத்தவும் வேண்டியுள்ளது.பெரும்பகுதிமுஸ்லிம்கள் சமூக பொருளாதாரம், கல்வி,சுகாதாரம் மற்றும் அரசியல் நிலைகளில் பின் தங்கியுள்ள நிலையில் முஸ்லிம்களிடத்தில் ஒற்றுமை, சமூகநீதி,ஏற்கெனவே நிலவுகிறது என்பது தவறான வாதமும் அணுகுமுறையுமாகும்.

இது பற்றி சமூகவியலாளர் முகமது ஷஹான் ஷஹா அன்சாரி மேலும் குறிப்பிடும்போது பின் தங்கிய முஸ்லிம்களுக்கு கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்களில் வாய்ப்புகளை ஏற்படுத்திதருவதும், முஸ்லிம்பிரிவுகளுக்குள்ளே சாதிக்கலப்பு திருமணங்களை ஊக்குவிப்பதும், ஆணாதிக்க மேலாண்மைக்கு எதிராக இஸ்லாம் கூறும் பெண்ணுக்கான சம் உரிமைகளை நிலைநாட்டுவதும் அவசியமாகும் என்கிறார்.