Friday, May 28, 2010

அறிவுபூர்வமான விவாதங்கள்........


கி.பி. 1191ம் ஆண்டில் கோடைக் காலம். சுட்டெரிக்கும் வெய்யிலின் கொடுமை யமுனை நதிக்கரையின் குளிர்ந்த காற்றினால் குறைந்திருந்தது. பௌர்ணமிப் பொழுதின் முன்னிரவில் ஹாஜா நாயகம் அவர்களின் கூட்டதார்க்கு புத்த சாதுகளின் தலைவர் சாதுராமிடமிருந்து அழைப்பு வந்தது. "தாங்கள் எங்களுடைய குருநாதரின் பர்ண சாலைக்கு

வரவேண்டுகிறோம். உங்களுடைய மார்க்கத்தின் உண்மைகளை புரிந்து கொள்ளவும் எங்களுடைய கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளவும் அவர் விரும்புகிறார்.

ஹஜ்ரத் ஹாஜா நாயகம் அவர்கள் எவ்விதத் தயக்கமும்மின்றி புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுடைய சீடத் திருக்கூட்டம் பின் தொடர்ந்தது.பர்ண சாலையின் வாசலில் சாதுராம் தமது சீடர்களின் கூட்டத்தோடு நின்று வரவேற்றார்.

தூய வெள்ளை ஆடை அணிந்த புத்தபிட்சுகள் இடுப்பைச் சுற்றி அக்குள் வரையிலும் ஒரு துணியை வரிந்து கட்டி வலத்தோளை மூடாது விடுத்திருந்தனர். அவர்களில் சிலர் பூமாலைகளைத் தலையில் சூடியிருந்தனர். பர்ண சாலையின் உள்ளே ஊதுவத்தி மணம் கமழ்ந்தது. தியான அறைக்குள் திருக் கூட்டத்தாரை அழைத்து சென்ற சாதுராம் உயர்ந்தெழுந்த

புத்தபெருமானின் சிலையின் முன்னின்று முணு முணுத்தார்.

புத்தம் சரணம் கச்சாமி தம்மம் சரணம் கச்சாமி! சங்கம் சரணம் கச்சாமி."

பின்னர், விருந்தினர்கள் அமர்த்தபட்டார்கள். விருந்து கொடுக்கபட்டது. பின் சாதுராம் பேச்சை துவக்கினார். பெரியோரே! தாங்கள் அரேபிய நாட்டிலிருந்து வருவாதாக அறிந்தேன். இந்தியாவின் எல்லையினுள்ளே நுழைந்து வரும் யாரும் இந்த நாட்டின் பழம்பெரும் ஞானம் கண்டு ஆச்சிரியமடையாமலிருக்க முடியாது. இந்நாட்டில் தாங்கள் நுழைந்து வந்திருக்கும் நோக்கம் எதுவாக இருப்பினும் புத்தபிட்சுக்களான எங்களுடைய கடமை புத்தபெருமானின் ஞானோபதேசங்களை உங்களுக்கு உணர்த்துவதாகும்."

புத்த பெருமானின் பெருமைகளை அவர் எடுத்தோதினார். "ஆசையே பிறவிக்குக் காரணம். ஆசையை ஒடுக்க வேண்டும் அதுவே முக்திக்கு வழி. புத்த மதத்திலே ஒரு காலமிருந்தது. யோகசாதனைகளின் மூலம் ஆசையை ஒறுத்து அழிப்பதே நோக்கமாயிருந்தது. மாமுனி உப குப்தரின் தோற்றதுக்குபின் உண்மை உணரப்பட்டது. உண்மைகளை உணர்த்த வந்த புத்தபிரானே யதார்த்தத்தில் பரம்பொருளாவார் என்பதை உணர்ந்தோம். அவரை வழிப்படும் மகாயான பக்தி மதத்தை பரப்புவதிலே நாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்."

சாதுராமின் நீண்ட சொற்பொழிவுக்குப் பின்னர் ஹஜ்ரத் அவர்கள் பேசினார்கள்.

"அறிஞர் பெருமக்களே! நல்லது உங்களுடைய ஞானமார்க்கத்தையும், பக்திமார்க்கத்தையும் உணர்ந்து கொண்டோம். நாங்கள் இந்நாட்டுக்கு வந்ததின் நோக்கம் இன்னதென்ன விளக்கும் முன்னர் உங்களிடம் மேலும் சில விஷயங்களை நாங்கள்

கேட்டறிய விரும்புகிறோம்."



ஹஜ்ரத் அவர்கள் தமது தலைமைச் சீடர் குத்புத்தீன் பக்தியார் அவர்களை நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தார்கள். அவர் தமது குருநாதரின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு புத்தமுனி சாதுராமின் பக்கம் திரும்பி சில கேள்விகளைத் தொடுத்தார்.

குத்புதீன்: "பெரியோரே! ஆசையே அவஸ்தைக்கு காரணமென்று கூறினீர்கள். ஆசையென்பது பரம்பொருளின் ஒர் அம்சமா? அல்லவா?"

சாதுராம்: "பரம்பொருளின் அம்சமல்ல, அது ப்ஞ்ச பூதங்களால் விளையும் பண்பு."

குத்புதீன்: "பஞ்சபூதங்கள் பரம்பொருளின் அம்சமல்ல என்று சொல்கிறீர்களா?"

சாதுராம்: பஞ்சபூதங்களும் பரம்பொருளின் அம்சம்தான். எனினும், அதன் பண்புகளில் நின்றும் தோன்றும் ஆசை மனிதனுக்கு அவஸ்தையே உண்டு பண்ணுகிறது."

குத்புதீன்: "உங்களுடைய வாதத்தில் முன்னுக்குப்பின் முரண்பாடு உள்ளது. 'நான்கு' என்பதில் இரண்டு 'இரண்டுகள்'

இருப்பதை ஒப்புக் கொள்கிறீர்கள். நான்கில் நான்கு 'ஒன்று' கள் இருப்பதை மறுக்கிறீர்கள்.. பரம் பொருளிலிருந்து பஞ்சபூதங்கள் தோன்றியதாக ஒப்புக்கொள்கிறீர்கள். பஞ்சபூதங்களிலிருந்து தோன்றும் ஆசையில் பரம்பொருள் இல்லையென்று வாதிடுகிறீர்கள்."

சாதுராம்: (மவுனம்)

குத்புதீன்: "எங்களுடைய மார்க்கத்தின் குருநாதர் முஹம்மது(ஸல்) அரபு நாட்டில் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றினார்கள். அவர்களின் உபதேசத்தின்படி ஆசைகள் அத்தனையும் பரம்பொருளான இறைவனின் "அமா" வெனும் இருக்கையிலிருந்தே மனிதனின் இதயத்துள் நுழைகின்றன. எனவே ஆசைகளை மனிதன் அழிக்கக் கூடாது;ஒழுங்கு படுத்தவேண்டும்."

சாதுராம்: "ஆசைகளை எப்படி ஒழுங்குபடுத்த முடியும்? சாத்தியமில்லாத ஒன்றைக் கூறுகிறீர்கள்."

குத்புதீன்: "இல்லை, சாத்தியமான ஒன்றைத்தான் கூறுகிறோம். ஆசைகளை ஒழுங்குபடுத்துவது சாத்தியமில்லை என்று நீங்கள் கூறுவது அவற்றின் மூலமான ஆண்டவனின் சர்வவல்லமை எனும் பண்பிலே குறை காண்பது போன்றது."

சாதுராம்: "ஏதோ நீங்கள் கூறுவதில் உண்மை இருப்பது போல் தோன்றுகிறது. எனினும் ஆசையின் நிலைகளான பெண்களோடு இணைந்து வாழும் வாழ்வில் முக்தி வாய்க்க வழியில்லை அல்லவா"

குத்புதீன்: "அதுவுமில்லை! ஒரு மனிதன் நான்கு பெண்களை மணந்து கொள்ளலாம் என எங்களுடைய மார்க்கத்தின் தலைவரிடமிருந்து நாங்கள் கற்றிருக்கின்றோம்."

சாதுராம்: (இரு காதுகளையும் பொத்திக் கொள்கிறார்) "அபசாரம்! சாத்தியமே இல்லை!"

குத்புதீன்: "ஏன் சாத்தியமில்லை என்கிறீர்கள்? உலகிலுள்ள யாவுமே பரம்பொருளிருந்து விளைந்து இருப்பதுதானே. நீங்கள் பெண்களை ஏன் பரம்பொருளின் அம்சமல்ல என்று கருதுகிறீர்கள்?"

சாதுராம்: "சரி அப்படியே பார்த்தாலும் ஒரு மனிதனுக்கு நான்கு பெண்கள் என்பது பொருத்தமற்றது. ஒன்றுக்கு ஒன்று என்றாவது கொள்ளலாம்."

குத்புதீன்: "மண்,நீர், நெருப்பு, காற்று இவை வானத்தில் ஒடுங்குவதில்லையா? அதுபோன்று நான்கு பெண்கள் ஒடுங்கிவிடுவற்கு ஆண்மகனிடத்திலே ஐக்கியமாகியிருநால் அவனே அவர்களுக்கு ஆன்ம வழி காட்டியும் ஆகிவிடுகிறான்."

சாதுராம்: "நல்லது பெரியோரே! உங்களுடைய மார்க்கத்தில் சில உண்மைகள் இருப்பதை நான் உணர்கிறேன்.. ஆசைக்கும் ஒர் ஒழுங்குபடுத்துதல் உண்டென்கிறீர்களே, அப்படி ஒரு விஷயத்தை உங்கள் மார்க்கத் தலைவர் போதித்திருக்கிறாரா?'

குத்புதீன்: "போதித்திருக்கிறார். "ஷரீஅத்" என்னும் சட்ட ஒழுக்கம் எங்களிடம் உள்ளது. உண்மையில் இதனை குரு நாதரான மகான் முஹம்மது(ஸல்) சொல்லவில்லை. இது பரம்பொருளான இறைவனே அவர்களுக்குத் தந்த ஞானத்திலிருந்து கிடைத்த ஒழுக்கம். இது பிரபஞ்சம் முழுதிலுள்ள மனிதர்கள் அனைவருக்கும் செல்லும்படியாகும்.

சாதுராம்: "அப்படியா? பரம்பொருளான இறைவனே தந்த ஞானமென்று உங்கள் குருநாதர் கூறினாரா?"

குத்புதீன்: "கூறினார்கள்! பரம்பொருள் இன்னதென்று புரியாததால் உங்கள் குருநாதர் புத்த பெருமான் மறைந்து பத்து நூற்றாண்டுகள் கடந்தபின் அவரையே நீங்கள் பரம்பொருளாகி வழிபடத் துவங்கியுள்ளீர்கள். எங்களுடைய குருநாதர் முஹம்மது(ஸல்) பரம்பொருளையும் சுட்டிகாட்டி, அவனுடைய பண்புகளையும் போதித்து அவன் தந்த ஒழுக்கநெறி முறைகளையும் எங்களுக்கு கற்றுத்தந்து விட்டுப் போயிருக்கிறார்."

சாதுராம்: "அவர் பெயர் என்ன சொன்னீர்கள்! புத்த பெருமான் தனக்குப் பிற்காலத்தில் பாலைவனங்களில் சம்பூர்ண ஞானாம்சான தீர்க்கதரிசி ஒருவர் தோன்றுவார் என்று கூறியதாக வரலாறு உண்டு!"

குத்புதீன்: "முஹம்மது என்பது அவர் நாமம்."

சாதுராம்: (யோசனையில் அழ்கிறார்)

ஹஜ்ரத் ஹாஜா நாயகம் : "நண்பரே! அவருடைய திருப்பெயர் 'அஹ்மத்' புகழுக்குரியவர் எனப்பொருள் படும்."

சாதுராம்: "ஹா! அஹ்மத்! இப்பெயர் புத்த பெருமான் கூறிப்போந்தது. மேலும் அவருடைய நாமம் ரிக், யஜூர் வேதங்களிலும் உள்ளது. "ஒட்டகத்தின் முதுகிலே சிரம் பணிந்தவராக அவர் நகரத்தை வெற்றி கொண்டு அதில் நுழைவார்" இதுதான் வேதவாக்கியம், அவரையா சொற்கிறீர்கள், அவருடைய கூட்டத்தினரா தாங்கள்?"

ஹாஜா ஹஜ்ரத் அவர்கள் "அல்லாஹூ அக்பர்" என்று சப்தமிடுகிறார்கள். பர்ணசாலை நடுநடுங்குகிறது. சிலைகள் குப்புறக்கவிந்து விழுகின்றன. வானில் இடி மின்னலுடன் பெருமழை பிடித்துக் கொண்டது. பர்ண சாலைக்குள்ளே

சாதுராமின் கூட்டத்தார் ஹஜ்ரத் ஹாஜா நாயகம் அவர்களின் இதயகோஷத்தில் கலந்து விடுகிறார்கள்.

"அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ்

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ர்சூலுல்லாஹ்!"

No comments:

Post a Comment